Monday, September 3, 2012

மனிதா...விழித்தெழு....!


http://www.marhum-muslim.com/  
MUST  READ
  முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள்! 
[ திறமையற்ற திறமைசாலிகளே! தொழில் திறமையற்ற ஓர் இனம் இருக்குமானால், அது உங்கள் இனமே! தங்கள் நிலைமையைப் பற்றி கவலையே இல்லாத இனம் ஒன்று இருக்குமானால், அதுவும் உங்கள் இனமே! இடிவிழுந்து பாழாய்ப்போன நெற்பயிரை ஒத்தது உங்கள் இனமே!
மூதாதையர்களின் புதைகுழிகளை விற்றுக் காலங்கழிப்பவர் இருப்பாரானால், அவர்கள் நீங்களே! சமாதி (கப்ர்) வணிகஞ்செய்வதில் நீங்கள் கீர்த்தி பெற்றுவிட்டீர்கள்! இத்தன்மையுள்ள உங்களுக்கு விக்கிரகங்கள் கிடைத்துவிட்டால் அவற்றையும் விற்பனை செய்ய மாட்டீர்களா என்ன?
மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்!
‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்.
இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே! ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!
உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும். இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்.’ – மகாகவி, அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி ]
உறங்கும் மனிதனே விழித்தெழு!
  மகாகவி அல்லாமா இக்பால் 
தொழுகைக்காக பாங்கு சொன்னதும் சிலர் மஸ்ஜிதை நோக்கி தொழச் செல்கிறார்கள். சிலர் இருந்த இடத்திலேயே பாங்கு சொல்லி முடியுமட்டும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர். காலையில் ‘ஃபஜ்ர்’ தொழகை நேரத்தில் எல்லோரும் எழுந்து மஸ்ஜிதுக்குப் புறப்படுகின்றனர். சிலர் ‘ஒதூ’ செய்துவிட்டு தொழுகிறார்கள். சிலர் பல் துலக்கி, முகத்தைக் கழுவி விட்டு வீட்டுக்கு விரைகின்றனர்.
முஸ்லிம்களில் வேஷதாரிகள் அதிகரித்துவிட்டனர். புகழுக்கும், பொருளுக்கும் ஆசைப்படுவோர் நம்மிடையே எண்ணற்றவர். இறைவனைப் புகழ்வதற்கும், இறை வழியில் பொருளை செலவிடுவதற்கும் நம்மிடையே இருப்பவர் மிகச்சிலரே. வாரத்தில் ஒரு நாள் ‘ஜும்ஆ’ தொழுகைக்கு மட்டும் கூட்டமாக வருகிறார்கள். மற்ற நேரங்களில் ஆளைக் காணோம். ‘ஈத் - பெருநாள்’ தொழுகையில்கூட கலந்து கொள்ளாத முஸ்லிம்கள்கூட இருக்கின்றனர்.
  பேராற்றல் மிகுந்த பேஷ் இமாம்களே! 
பேஷ் இமாம்கள் யார்? பள்ளிவாசலில் தொழுகையின் ஐவேளையிலும் முன்னின்று தொழுகை நடத்துபவர் - இப்படித்தான் எண்ணற்ற முஸ்லிம்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஏன்? பேஷ் இமாம்கள் கூட தங்களை இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பேஷ் இமாம்களே! இதுமட்டுமல்ல உங்கள் அலுவல். முஸ்லிம்களுக்கு முன்னின்று தொழுகை நடத்துவது போல் எல்லா காரியங்களிலும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாய் இருக்க வேண்டுவது உங்கள் கடமை.
இன்றைய பேஷ் இமாம்களில் பலர் என்று சொல்ல வரவில்லை, சிலர் என்றே சொல்லுகிறேன். ‘பணத்தில்’ மட்டும் தான் குறியாக இருக்கின்றார்கள். (போதிய வருவாயின்றி தவிக்கும் பேஷ் இமாம்களும் இருக்கின்றார்கள்) பணக்காரர்கள் பின்னாலேயே சுற்றும் பேஷ் இமாம்கள், அவர்கள் செய்யும் குறைகளை கண்டிக்கும் தைரியம் அற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். ஏன்? அவர்கள் கொடுப்பது நின்றுபோய்விடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஏழையைக் கண்டால் ஸலாம் சொல்லாத இவர்கள் பணக்காரர்கள் தூரத்தில் வரும்போதே ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று வாயினிக்க புன்சிரிப்புடன் கூறுகிறார்கள்.
இன்றைய சமுதாயத்திற்கு துணிந்து கண்டிக்கும் பக்குவம் பெற்ற பேஷ் இமாம்கள் நிறைய தேவை. காசு ஒன்றுக்காக வாழ்வது முறையன்று. சிறந்த மதபோதகர்களாக வாழ வளர்ச்சி பெறவேண்டும். அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் இன்றைய மதபோதகர்களைப்பற்றிக் கூறும்பொழுது, இறைவன் கூற்றில் வைத்துக் கூறுகிறார்.
1. முதிர்ந்த பேரறிவும், மேலான ஆராய்ச்சியும் இஸ்லாமிய மதபோதகரிடம் இல்லை.
2. உள்ளத்தை உருக்கும் தீப்பொறிகள் அவர்களது வார்த்தைகளில் இல்லை.
3. ‘பாங்கு’ சொல்லும் சடங்கு மட்டும் ஒருவாறு நடக்கிறது. ஆனால் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய உணர்ச்சி அதில் இல்லை.
4. தத்துவசாஸ்திரம் மட்டும் இருக்கிறது. ஆனால் பாமரமக்களுக்கு விளங்கும் வகையில் விளக்கும் ஆற்றல் மிக்க பேரறிஞர்கள் இல்லை.
5. தொழுவோர் வரக் காணவில்லை என்று பள்ளிவாசல்கூட அழுகின்றன.
6. அதாவது, ஆரம்ப கால முஸ்லிம்களைப் போன்ற சற்குண சீலர்கள் இக்காலத்தில் இல்லை.
அவர்களின் முதற்கூற்றை கவனியுங்கள். ‘முதிர்ந்த பேரறிவு – மேலான ஆராய்ச்சி’ - இவ்விரண்டும் இன்றைய ஆலிம்களிடம் இல்லாததற்கு ‘மார்க்கப்பற்று’ அளவுக்கு மீறி இல்லாததே காரணம். ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் அவர்களிடம் பற்று காணப்படுகிறது. ஆகவே, முதிர்ந்த பேரறிவு இல்லை. அதைத் தொடர்ந்த மேலான ஆராய்ச்சியும் இல்லை. ஒருசில ஆலிம்கள் மட்டும் இஸ்லாத்தில் பற்று மிக்கவராய் இருக்கின்றனர். பற்றில்லாதவர்கள் பலபேர் இருப்பதினால், பற்று மிகுந்த எண்ணங்கள் பயன்படாமல் போகின்றன.
கவியின் இரண்டாவது குற்றச்சாட்டு என்ன? உள்ளத்தை உருக்கும் தீப்பொறிகள் (சொல்லாற்றல்) இல்லை என்பது. இதற்கும் விடை காணுவது எளிது.
முதிர்ந்த பேரறிவு இல்லை. அதைத் தொடர்ந்த மேலான மேலான ஆராய்ச்சியும் கிடையாது. அதைத்தொடர்ந்த சொல்லாற்றலும் இல்லை. உள்ளத்தில் திண்மை இருந்தால் தானே சொல்லாற்றல் இருக்கும்?
மூன்றாவது குற்றச்சாட்டு? ‘பாங்கு’ சொல்வதை ஒரு சடங்கு என்கிறார். இன்றைய நிலை அதுதான். உள்ள உணர்ச்சி ஒன்றி இருந்தால் தானே கேட்போர் இறையச்சமிகுந்து தொழுக ஓடிவருவார்கள்! பேருக்காக பாங்கு சொன்னால், தூங்கிக் கொண்டிருப்பவனுக்கு தாலாட்டு போல அமைந்து விடுகிறது.
நான்றாவது குற்றச்சாட்டின் மூலம் இன்றைய மதபோதகர்களுக்கு அறிவுரை கூறுகிறார். பாபர மக்களுக்கும் புரியும் வகையில் தத்துவங்கள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதை எடுத்துக்கூறுகிறார்.
ஐந்தாவது – ஆறாவது மறுமொழி கூறுவது என்ன? முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தொழுவதற்கு மஸ்ஜிதுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளும் புறமும் உண்மை முஸ்லிம்களாக வாழ்பவராக இல்லை என்ற கருத்து தெரிய வருகிறது.
  குணமிக்க குடும்பத் தலைவர்களே! 
உங்களில் சிலர் வீட்டு அலுவல்களை முடித்தவுடன் காற்றுவாங்க கடறகரைக்கோ அல்லது படிப்பகத்திற்கோ அல்லது கடைத்தெரு காட்சிகளை கண்டுகளிக்கவோ செல்கிறீர்கள். சில சமயங்களில் ‘சும்மா வேலையின்றி வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இறைவனுடைய ஞாபகம் வந்ததா? அப்படி தப்பத்தவறி வந்தாலும் மஸ்ஜிதுக்குச் செல்ல மனம் வந்ததா? உலக வாழ்க்கையில் சுகம் காணவே உங்கள் மனம் விரும்புகிறது. உங்களைப் படைத்த அல்லாஹ்வை ஐவேளை தொழுவதில் உங்களுக்கு என்ன தொந்திரவு இருக்கிறதோ தெரியவில்லை! சோறு சாப்பிட்டுவிட்டு சும்மா சுகமாக – சோம்பேரிகளாய் வாழ்வதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? ‘முஸ்லிம் பெரியவர்’ என்று உங்களை அயலவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக தலையில் அழகாக தொப்பியை அணிந்து கொண்டு, தாடி வைத்துக் கொண்டு சங்கையாக தெருவில் நடமாடுகின்றீர்கள். கோலத்தினால் மட்டும் ஒருவன் உண்மை முஸ்லிம் ஆகிவிட முடியாது என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கட்டும்.
இஸ்லாத்தில் செயலே பெரிதாக மதிக்கப்படுகிறது. நன்னடத்தையே உங்களை நன்னிலைக்கு உயர்த்தும். சுத்தமான சட்டை – கைலி – தொப்பி – செருப்பு அணிந்து கொண்டு ஊர்க்கதைகளை வாய்வலிக்கப் பேசிக்கொண்டு இருந்தால் உங்களை அல்லாஹ் விருப்பத்துடன் பார்க்கமாட்டான். முஸ்லிம் என்போர் யார்? அல்லாஹ்வையும் அவனது திருத்தூதர் ஸல்லல்லாஹ{அலைஹி வஸல்லம் அவர்களையும் நம்பி வழிமுறைகளைப் பேணுபவர்களே உண்மை முஸ்லிம்கள் ஆவர்.
  திறமையற்ற திறமைசாலிகளே! 
உங்களை இப்படி அழைப்பதற்கான துணிவை எனக்குக் கொடுத்தது அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் கவிதையே. முஸ்லிம்களில் ஒரு பிரிவினரை அவர் கடுமையாக சாடுகிறார். அந்த பிரிவினர் யார் என்பதை கீழே பார்த்தால் உங்களுக்குப் புரியும்!
1. தொழில் திறமையற்ற ஓர் இனம் இருக்குமானால், அது உங்கள் இனமே!
2. தங்கள் நிலைமையைப் பற்றி கவலையே இல்லாத இனம் ஒன்று இருக்குமானால், அதுவும் உங்கள் இனமே!
3. இடிவிழுந்து பாழாயப்போன நெற்பயிரை ஒத்தது உங்கள் இனமே!
4. மூதாதையர்களின் புதைகுழிகளை விற்றுக் காலங்கழிப்பவர் இருப்பாரானால், அவர்கள் நீங்களே!
5. சமாதி (கப்ர்) வணிகஞ்செய்வதில் நீங்கள் கீர்த்தி பெற்றுவிட்டீர்கள்!
6. இத்தன்மையுள்ள உங்களுக்கு விக்கிரகங்கள் கிடைத்துவிட்டால் அவற்றையும் விறபனை செய்ய மாட்டீர்களா என்ன?
கவிஞர் அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் கண்டு மிகவும் உளம் வருந்தி கூறியவைகளே மேற்கண்ட வரிகள்.
உறங்கும் மனிதனே! விழித்தெழு. மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்! என்பவைதான் அவர் உள்ளத்தில் பீரிட்டெழந்த கருத்துகளாகும். முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள் என்பதுதான் அவரது முழக்கத்தின் உட்பொருள்.
கவிஞர் அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் மேற்கண்ட 6 வாக்கியங்களை நோக்கி வாருங்கள். எல்லா வாக்கியங்களின் பொருளும் உங்களுக்கு விளங்கியிருக்கும். எனினும் அந்த 6 வது வாக்கியத்தை கூர்ந்து கவனியுங்கள். அவர் உள்ளத்தில் எவ்வளவு வேதனையிருந்தால் அந்த கடைசி வரியை கூறியிருப்பார்?
அவர் மனம் நொந்து கூறியிருக்கிறார். ‘விக்கிரகங்கள்’ கிடைத்துவிட்டால் அவற்றையும் விற்பனை செய்ய மாட்டீர்களா? என்று ஆற்றாத்துயரத்தோடு இக்கேள்வியைக் கேட்கிறார். இந்த இழிநிலையிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளுங்கள், சோம்பலை விட்டொழிந்து சுறுசுறுப்புடன் செயலாற்றுங்கள், நீங்கள் இஸ்லாத்திதின் பெருமையைக் காப்பாற்றுங்கள் என்பதே அவரது திடமான உள்ளக்கிடக்கையாகும்.
‘முஸ்லிம்கள் அனைவரும் உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்தே தீரவேண்டும்’ என்பதே அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்களின் உணர்ச்சிக்கவிதைகள் உணர்த்துகின்றன.
  இஸ்லாமிய பற்றாளர்களே! 
உங்களின் நற்செயல்கள் மூலம்தான் உலகினர் உங்களைப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புண்டு. இஸ்லாத்திற்குப் பெருமையுண்டு. ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்பதற்கு உங்களைப் பார்த்தல்லவா விளக்கம் பெறவேண்டும்! ‘எல்லா இனத்தாரிலும் மேலானவர்களாக இறைவன் நம்மை ஆக்கியுள்ளான்’ - இறைவனே இதற்கு தனது திருமறையில் சாட்சி பகர்கின்றான். ஆனால் இன்றைய உலகில் நாம் தாம் மேலானவர்களாக வாழ்கிறோமா? நம் நெஞ்சிலே ஐயம் பிறக்கின்றது. ஏன் இந்த ஐயம்? நமக்கு இஸ்லாமிய உறுதி இல்லை. ஆகவேதான் இந்த ஐயம் நம்மிiயே குடிபுகுந்துள்ளது.
இந்த உலகமானது நேரான முறையில் - வழியில் இயங்க முஸ்லிம்களாகிய நாம்தான் தேவைப்படுகின்றோம். நம்முடைய உண்மை நிலையினை உலகினர் விரைவில் அறிந்துகொள்ள வேண்டும். நமக்கு இளைப்பாறுகின்ற நேரம்கூட கிடையாது. ஏனெனில், நாம் இதுவரை இஸ்லாமிய வழியில் மிகவும் மெதுவாக நடந்து வந்திருக்கிறோம். இஸ்லாமிய பாதையோ மிகவும் நீளமானது. நடக்க வேண்டிய பாதையே மிகவும் அதிகம். மிகவும் பின்தங்கிய நிலையில் நம் சமுதாயம் இருக்கின்றது.
அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி அவர்கள் ‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! என்று வேகமாக தட்டி எழுப்புவதுபோல் கீழ்க்கண்ட அவரது வைரவரிகள் அமைந்துள்ளன. நம்முயை பணியை மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்ற நம்மை உற்சாகப்படுத்துகின்றன.
‘உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை’.
‘இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்’.
உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும்’.
‘இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்’
‘இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே!’
‘ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!’
நமது முன்னோர்கள் இஸ்லாமிய நற்சேவைக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்துள்ளனர். இடைக்காலத்தில் நாம் இறையை மறந்து, இறைமறையை மறந்து உலகாசையில் மதிமயங்கி வீணர்களாய் நம் தகுதியை நாமே குறைத்துக் கொண்டோம். இனியும் நாம் இப்படி சோம்பேரிகளாக காலங்கழிக்கக்கூடாது. இஸ்லாமியப் பெருமையை நம் செயல்களால்தான் உலகினுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இன்றைய நிலையில் நம்பிக்கையிழந்து தோல்வி மனப்பான்மையுடன் நாம் உலகில் உலவுகின்றோம். இந்த மனப்பான்மை நம் நெஞ்சைவிட்டு அகலவேண்டும். வெற்றி நம்மைத் தேடிவரவேண்டும். இறைவனுக்கு மாறுசெய்யாத உண்மை அடியார்களாக உலகில் உய்ய வேண்டும். இஸ்லாமிய வெற்றி ஒன்றே நம் குறிக்கோளாகவும் - கொள்கையாகவும் - கோட்பாடாகவும் இருக்க வேண்டும். நிச்சயம் இறைவன் உதவி நமக்குக் கிட்டும். இதில் எவ்வித ஐயமும் இல்லை. உறங்கும் மனிதர்களே! விழித்தெழுங்கள்! முழங்கிடுவோம் - ‘அல்லாஹ{ அக்பர்’
-ஃபத்ஹுல் இஸ்லாம், டிசம்பர் 1969 (- மூலக்கட்டுரை வெளியாகி அரை நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இன்றைக்கும் இதன் கருத்துக்கள் சமுதாயத்திற்கு தேவையுடையதாகவே உள்ளது.)

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 நல்ல கருத்துரைவழங்கியோர்::