Thursday, July 5, 2012

காலச்சுவடும் -தவ்ஹீதும்...!

இதில் இரண்டு கட்டுரை உள்ளது. முதல் கட்டுரை பீர் முகமது என்பவர் எழுதியது. தமிழ் நாட்டில் உள்ள தவ்ஹீது வாதிகளை எதிர்த்து எழுதியுள்ளார். கொள்கையை விமர்சித்து மட்டுமே எழுதியுள்ளார். அசிங்கமாகவோ, அநாகரீகமாகவோ ஏதும் எழுதவில்லை. அவருக்கு தெரிந்ததை எழுதியுள்ளார். அடுத்த கட்டுரையில் அவருக்கு நான் பத்தி எழுதியுள்ளேன். பார்க்கவும். விரும்பினால் internet-il போடலாம்
wasslam
Basheer Ahamed




Kalachuvadu March 2011 article.
 
தமிழர் பண்பாடு
முஸ்லிம்களின் பண்பாட்டு மாற்றங்கள்!
களந்தை பீர்முகம்மது
முஸ்லிம் சமூகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போது வரையறை இல்லை எப்படியும் இருந்துவிடலாம் என்றும் சொல்வதற்கில்லை! இரண்டுக்கும் இடையிலே சிக்கியுள்ளது. பொது வெளியில் கரைந்தபடியே தனித்தன்மையையும் பேணி வருகிறது. ஒரு சிறிய காலகட்டம்தான் மாற்றவர்களைக் கொண்டுவந்துள்ளது; இனி இதைத் தவிர்க்க முடியாதோ எனும் பதற்றமும் உண்டாகியிருக்கிறது.
உலகம் கிராமமாகச் சுருங்கி வந்த வேகத்தில் பல நல்லவை உதிர்ந்துபோய்விட்டன. வெளிநாட்டுப் பயணங்கள், வேலைவாய்ப்புகள் முஸ்லிம்களிடம் இரண்டுவிதமான தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளன. முஸ்லிம்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்று வேலைகளின் நிமித்தம் பயணிக்கையில் அவர்கள் மேற்கத்திய மோகிகளாக, நுகர்வு வெறியராக, இஸ்லாமியக் கலாச்சாரங்களைக் கைவிடுவதில் தயக்கமற்ற மனிதராகத் திரும்புகிறார்கள். அவர்களுடைய வீடுகள் மேலைப் பண்பாட்டின் வாசனைக்குள் அமிழ்கின்றன. கால்களை முழுமையாக மறைக்க வேண்டும் என்னும் எண்ணமில்லாமல் பெர்முடாஸ் அணிந்து வெளிவருகிறார்கள். நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். தாடி இல்லை; தொப்பி இல்லை. அவரைக் கோம்பை நாய்கள் வழிநடத்திச் செல்கின்றன. மனக்கிளர்ச்சிகள் இல்லாமல் நோன்பு பிடிக்கிறார்கள்; ஏழைகளின் பசியாற்றும் ஜகாத்தை முஸ்லிமின் கடமையாக நினைத்து வழங்குவதில்லை. தம் சொந்த இரக்க மனோபாவங்களைப் பொறுத்து தர்மங்கள் கொடுக்கிறார்கள். மாலையில் ஷாப்பிங் மால்களில், திரையரங்குகளில் சுற்றித் திரிகிறார்கள் தம் இளம் மனைவியருடன் - குழந்தைகளுடன்! இருந்தாலும் முக்கியமான விஷயம், ‘அல்லாஹ்’வை அவர்கள் மறக்கவில்லை.
பிறிதொரு சாரார் முஸ்லிம் நாடுகளுக்கே பயணிக்கிறார்கள். அரபு ஷேக்குகளின் மொழிகளைக் கற்கிறார்கள்; பிரமாண்டமான மசூதிகள் அவர்களின் உள்ளங்களையும் உடல்களையும் ஒருசேர ஆக்ரமிக்கின்றன. அரேபியப் பழங்குடி இனத்தின் கலாச்சாரத்தையே இஸ்லாமியக் கலாச்சாரமாகக் கருதி, சொந்த ஊருக்கு ஓடோடி வந்து தம் பெண்டு, பிள்ளை, அன்னையரையெல்லாம் கருப்புத் துப்பட்டாவால் உடல் முழுக்க மூடி மறைத்துவிட்டுப் பின்னரும் அரேபியா ஓடிச் செல்கிறார்கள். இன்னொரு குழு அதே வேகத்தில் அங்கிருந்து இங்கு ஓடிவருகிறது. “தொழுகைக்கு ஏது தொப்பி?” என்று வீசியெறிந்து விட்டுப் போகிறது; நோன்புக் காலத்தின் இருபது ரக்-அத் தொழுகையின் இடையிலே வந்து புகுந்து, இடையிலேயே நழுவிச் செல்கிறது. பள்ளி வாசலின் உள்ளே பயபக்தியாய், முழுமையான அமைதியாய் ஒரு பெருங்கூட்டம் ‘தராவீஹ்’ தொழுகையில் ஈடுபட்டிருக்க, இடையிலே வந்து புகுந்து இடையிலேயே அறுத்துக்கொண்டு வெளியேறிய இளைஞர்கள் பலரும் கலகலப்பாகப் பேசிச் சிரித்து விளையாடியவர்களாகப் பள்ளிவாசலையே கலாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். அரபு நாடு செல்லும் முஸ்லிம்களும் தத்தமது படிப்புக்கும் திறமைக்கும் ஏற்றபடி குளிரூட்டப்பட்ட அறைகளிலும் பாலைவனங்களிலுமாய் இருபிரிவுகளாக இருக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட அறைகளில் பெறப்படும் இஸ்லாம் அப்படியே பாலைவனத்திலும் பெறப்படுகிறது. ஆனால் வருவாய்ரீதியாக முஸ்லிம்கள் இங்கே இரு வகையாகிவிடுகின்றார்கள். என்றாலும் தமிழகம் திரும்பும்போது ஏதோ ஒரு அந்தஸ்து கருதி, இருவகையினரும் போட்டிபோட்டுக்கொண்டு ஒரே கலாச்சாரத்தையே பேசிக்கொண்டிருப்பார்கள்.
நாங்கள் பள்ளிக்கூடம் சென்றுவந்த நாட்களில் எங்கள் ஊரில் (ஒரு வசதி கருதி எங்கள் ஊர் என்று சொல்கிறேன். இதை அப்படியே ‘தமிழகம்’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஊருக்கு ஊர் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறுபட்டும் உள்ளன.) ‘சமைஞ்ச பெண்களை’ப் பார்க்க முடியாது. ஜன்னல்கள் மூடிக்கொள்ளும்-நாம் அந்த வீட்டைக் கடந்து போகும்போது! ஒருவேளை வீட்டுக்குள்ளே செல்ல நேர்ந்தால் சமையலறைக்குள் சமைஞ்ச பெண் ஓடி ஒளிந்துகொள்வாள். எனவே பள்ளிக்கூடம் என்பது அவர்களுக்கு விலக்கப்பட்டிருந்தது. “இன்னொரு வீட்டிலும் அடுப்பூதத்தானே போகிறது. அப்புறம் எதற்குப் படிப்பு?” இது மலையேறிவிட்டது இப்போது. ஓரளவு வறுமையிலிருந்து மீளும் சக்தி இருந்தாலும், அந்தப் பெண் இன்று பள்ளிக்கூடம் செல்கிறாள். படித்த பெண்ணை மருமகளாய்க் கொண்டால் வம்புதான் என்று எண்ணியதுபோக, இப்போது அவள் வேலைக்குப் போவாள்தானே என்னும் எண்ணத்தில் வந்து நிற்கிறது. திருமணத்திற்கு முன்பும் பின்பும் அவரவர் தன்மைக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற படி முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள். அநேகமாக வேலைக்குச் செல்லும் பெண்கள் புர்கா முறையை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அலுவலகங்களின் உள்ளே அது பாதியாகிவிடும். நகர்ப்புறக் கல்லூரி மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து செல்வதும் இருக்கவே செய்கின்றது. இந்த மாணவிகள் சினிமாவிற்கு வரும்போது புர்கா அணிந்துகொள்கிறார்கள். எனவே, மாற்றுச் சமயங்களின் தோழிகள் பெருகிவிட்டார்கள். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் முஸ்லிம் மாணவிகள் தோழிகளின் வீடுகளுக்குச் சென்று உற்சாகமாய்ப் பங்கெடுத்துக்கொள்கிறார்கள். தேர்வுகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பள்ளி, கல்லூரிகள் அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் பெற்று ஒளிர்கிறார்கள். இதனால் முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் உற்சாகம் பெறுவதுடன், அந்த முஸ்லிம் மாணவியைத் தம் நிறுவனங்களுக்கும் அழைத்துக் கௌரவிப்பதுடன், அவருக்குப் பாடம் போதித்த இந்து-கிறித்தவ ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கிறார்கள்.
முஸ்லிம்களின் திருமண வைபவங்களிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இதர சமயத்தினர்போல் முஸ்லிம்களின் ‘நிக்காஹ்’கள் திருமண மண்டபங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதே சமயத்தில் முஸ்லிம்கள் தொகுப்பாக வாழும் கீழக்கரை, காயல்பட்டினம், மேலப்பாளையம் போன்ற பல ஊர்களில் வீடுகள் அல்லது மசூதிகளிலேயே திருமணங்கள் நிகழ்கின்றன. வீடுகள் வசதியாக இருப்பதுடன், தெருக்களில் போக்குவரத்தும் இருப்பதில்லை. இந்தப் போதுமான இடவசதிகள் கூட்டங்களைச் சமாளிக்க உதவுகின்றன. தெருக்களின் முக்கால் பகுதியை அடைத்துப் பந்தல் போட்டு அங்கேயே சாப்பாடு பரிமாறிக்கொள்கிறார்கள். காயல்பட்டினத்தில் நான்கைந்து ஜோடிகளுக்குச் சேர்த்து ‘நிக்காஹ்’ வைப்பதால் செலவினங்களையும் வீண் அலைச்சல்களையும் நேரவிரயத்தையும் தவிர்த்துக்கொள்கிறார்கள்.
முஸ்லிம்களின் வாழ்விடங்களுக்கு உள்ளேயே நிகழ்ந்த திருமணங்கள் முன்பு நள்ளிரவுகளிலும் நள்ளிரவு தாண்டிய அதிகாலைப் பொழுதுகளிலும் நடந்தன. பக்கத்து வீட்டினரைத் தவிர, முஸ்லிம் மஹல்லாவின் மற்ற வீடுகளில் அனைவரும் தூக்கத்திற்குள் விழுந்திருப்பார்கள். நிக்காஹ் நடக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டித் தூக்கத்தில் இருப்போரை எழுப்புவார்கள். கதவைத் தட்டி அழைத்தபின் யாரும் தூங்குவதில்லை. தூக்கத்தை முறித்துவிட்டு மலர்ந்த முகமாகவே நிக்காஹ் வீட்டுக்கு வருவார்கள். அந்த இரவிலும் ஊர் சுற்றி மாப்பிள்ளையை அழைத்துவருவார்கள். நெருங்கிய உறவினர்களாய் அல்லது நண்பர்களாய் இருப்பின் ஊர்கோலமாய் அழைத்துவரப்படும் மணமகனுக்கு அவரவர் வீட்டு வாசல்களில் பசும்பால் கொடுப்பார்கள்; அவர் அதை மூன்றுமுறை உறிஞ்சிக்கொள்வார்; அங்கேயே மோதிரம் அணிவிப்பார்கள். பத்தமடையில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கைத்தறித்துண்டு அணிவிக்கிறார்கள்.
முன்பு எங்கள் ஊர் நிக்காஹ்களில் நாதஸ்வரம்-தவில் என்று போட்டு முழக்குவார்கள். கால மாற்றங்கள், செலவு தவிர்ப்பு, அரேபியப் பயணங்கள், இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி என்று எல்லாம் சேர்ந்து நாதஸ்வரத் தவில் கலைகளை ஒரேயடியாக ஓரம்கட்டிவிட்டன. நள்ளிரவு - அதிகாலைத் திருமணங்களாய் இருந்தபடியால் இந்து-கிறித்துவ நண்பர்கள், அவர்கள் குடும்பத்தினர் திருமணங்களில் கலந்துகொள்ள வாய்ப்பே இல்லாமல் இருந்தார்கள்.
கீழக்கரையில் இப்போதும் இரவில் திருமணங்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேற்பட்டு இப்போது தமிழகம் முழுவதும் பகல் திருமணங்களே நடக்கின்றன. மண்டபங்கள் என்பதால் எல்லாச் சமயத்தவரும் கலந்துகொள்கிறார்கள். மேலும் சைவ உணவுகளும் இப்போது வழங்குகிறார்கள். முஸ்லிம்கள் சைவ உணவுகளையும் பிராமணர்கள், பிள்ளைமார்கள் பிரியாணியையும் வெட்டுகிறார்கள். முன்பு நெய்ச்சோறு மட்டும்தான் இருந்தது. இன்று பிரியாணிக் கலாச்சாரம் மேலோங்கிவிட்டது. மதுரையில் வழங்கப்படுவது பிரியாணியா - பிரியாணியைப் போன்ற தோற்றமுடைய குஸ்காவா என்று புரியவில்லை. தாளிச்ச சாம்பாரும் தருவார்கள் அங்கு! கடந்த செப்டம்பர் மாதம் என் மகள் நிலோவ்னாவின் திருமணம் களக்காட்டில் நடந்தபோது, அசல் பிரியாணிக்குச் சாம்பாரும் ஏற்பாடு செய்துவிட்டோம்.
மேலப்பாளையம் திருமணங்களில் பிரியாணியோ நெய்ச்சோறோ கிடைக்கும் என்று போய்விட்டு ஏமாந்துவிட வேண்டாம். நல்ல அரிசியில் வெள்ளைச் சோறுதான் கிடைக்கும்! கொழுப்பு - இரத்த அழுத்தம்தான் காரணமாம். கறி ஆணம், சாம்பார், பருப்பு என்று தேவைப்பட்டால் அதுவே சைவம் அல்லது அசைவம் என்று சாப்பிட்டுக்கொள்ளலாம். முஸ்லிம்களின் திருமணத்திலும் வரதட்சணைகள் பாடாய்ப்படுத்துகின்றன. ரொக்கம் வேறு - நகை வேறு என்று இருந்த காலம், இப்போது நகைகள் மட்டும் என்னும் கட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் ரொக்கம் ரத்தாகிவிட்டது என்று அர்த்தமல்ல. ரொக்கமே அதிகப்படியான தங்க நகைகளாக மாறியவாறு இருக்கின்றன என்று அர்த்தம். இப்போது முஸ்லிம்களிடையே பரவிவரும் தவ்ஹீத் வாதம், இளைஞர்கள் சிலரை எவ்விதமான வரதட்சணையையும் வாங்கவிடாமல் தடுத்திருக்கிறது. ஆடம்பரங்கள், நேர விரயத்தைக் கட்டுப்படுத்திவிட்டது. ஆனால் இந்த நேர விரயத்தை, தவ்ஹீத்வாதிகள் மேடையில் அரசியல்வாதிகளைப் போல் உரத்த குரலில் பேசிப் பேசியே ஈடுகட்டிவிடுகிறார்கள். (அதாவது, நம்முடைய பொன்னான பொழுதுகளில் இன்னும் கொஞ்சம் பிடுங்கிக்கொள்கிறார்கள்.)
முஸ்லிம்களிடையே உள்ள பிளவுகளை இப்போது பட்டவர்த்தனமாகக் காட்டிக்கொண்டிருப்பவை தர்ஹா கலாச்சாரம் சார்ந்த விஷயங்களே! இதை தர்ஹாச் சீரழிவு என்று கொதிக்கிறார் காயல்பட்டினம் கே. எஸ். முஹம்மத் ஷுஐப். அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்புதான் தமிழகத்தின் தர்ஹாக்களைக் குற்றுயிரும் குலையுயிருமாக ஆக்கிவிட்டது. சந்தனக் கூடு ஊர்வலங்கள் எந்தக் கடலில் போய்க் கரைந்தனவோ தெரியவில்லை. களக்காடு - ஏர்வாடியில் நடந்த சந்தனக்கூடு வைபவங்களுக்கு நாங்கள் குடும்பம் குடும்பமாகச் செல்வோம். ஏர்வாடியில் இருந்த ஆயிரத்துக்கும் குறையாத வீடுகள் ஒவ்வொன்றிலும் களக்காடு அல்லது அசலூர் உறவினர்கள் இருப்பார்கள். ஏர்வாடியின் நிறமே மாறிப்போயிருக்கும். ஊரின் அந்த ஈடு இணையற்ற கலகலப்பை இப்போதும் என்னால் வர்ணிக்க முடியாது. நபியின் பேரன்கள் ஹஸன்-ஹுஸைன் பெயரில் இரண்டு சந்தனக்கூடுகள் வெவ்வேறு திசைகளில் இருந்து ஆறாம் தெருவின் ஒரு முக்கியப் புள்ளியில் சந்திக்கும். அதுதான் உச்சக் கட்ட வைபவம். தெருவை அடைத்துக்கொண்டு மனித வெள்ளம். அந்த இரண்டு சந்தனக் கூடுகளும் சந்திக்கும் இடத்தில் - நேரத்தில் திடீரென்று சிலர் கம்புகளுடன் உள்ளே பாய்ந்து கோஷமிட்டவர்களாக அதைத் தடுப்பார்கள். பதிலுக்கு வேறு சிலர் அவர்களுடன் கைகலந்து விரட்டிவிடுவார்கள். பின்பு கூடுகள் சந்திக்கும்; இரண்டும் சேர்ந்து ஆற்றங்கரைக்குப் போகும்.
கம்புகளுடன் சிலர் கூச்சலிட்டபடி ஓடிவருவதும் அதை இன்னொரு கூட்டத்தார் தடுப்பதும் ஆண்டுதோறும் நடந்தபடியே இருந்ததால் அதை இந்த விழாவின் ஒரு சடங்கு என்றே கருதிக்கொண்டிருந்தேன். ஏற்கெனவே ஊரில் வள்ளித் திருமணம், சூரன்குத்து வைபவங்களையும் ஆண்டுதோறும் பார்த்துக்கொண்டிருந்த காலம். வள்ளிக்கு முருகன் தாலி கட்டப்போகும் சமயத்தில் ஒரு தும்மல் விழும். இப்படித் தும்மல் அபசகுனமாக விழுந்துவிட்டதே என்பதால் அந்தத் திருமணம் நடக்காமலேயே திருவிழா முடிந்துவிடும். இது போன்ற ஒரு சடங்கு என்றுதான் அந்தக் கம்பு விளையாட்டுகளும் என்று எண்ணியிருந்தால், உண்மை அதுவல்ல. அவர்கள் உண்மையாகவே இந்தச் சந்தனக்கூடுகளை இஸ்லாத்திற்கு ஆகாதது என்று கூறித் தடுக்கவே முயன்றிருக்கிறார்கள். தடுக்க முனைந்த அந்தச் சிலரே இப்போது நூறு, ஆயிரம், பல்லாயிரம் என்று பெருகிவிட்டார்கள். இப்போது கீழக்கரை ஏர்வாடியில், நாகூரில் நடக்கும் சந்தனக்கூடு வைபவங்களில் முன்பிருந்த கூட்டம் திரள்வதில்லை. காணிக்கைகள் வசூலாவதில்லை. (இந்த மாற்றம் அல்லது இதன் முழுத் தன்மைகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொருவரும் தோப்பில் முஹம்மது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு நாவலைக் கண்டிப்பாக வாசிக்க வேண்டும். வசீகரமான இன்னொரு பரிமாணத்தைத் தோப்பில் எட்டிப்பிடித்திருக்கும் படைப்பு அது.)
பல தர்ஹாக்கள் பொலிவிழந்துவிட்டன. தர்ஹா கலாச்சாரத்தின் வழியாக முஸ்லிம்களிடமிருந்து வேறு சில பண்பாட்டுக் கூறுகளும் கழன்றுபோயின. ஏதாவது ஒரு நேர்த்திக்கடனையொட்டி முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் பாத்திஹா ஓதுவார்கள். அவரவர் வசதிக்கேற்ற பதார்த்தங்களைத் தயாரித்து, ஓதி முடித்ததும் அக்கம்பக்கத்தார் வீடுகளுக்கு அவற்றைக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். அந்தப் பழக்கம் இப்போது அறவே இல்லை.
நோன்பின் 27ஆம் நாள் லைலத்துல் கத்ர் நாளாகும். குர்ஆன் மானுடகுலத்திற்கு முதன்முதலாக இறங்கிய நாளாக அது கணக்கிடப்படுகிறது. அந்த நாளிலும் பணியாரங்கள், அடைகள், பழங்களைக் கொண்டு பாத்திஹா ஓதுவார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிறவீடுகளுக்கு அவை வழங்கப்படுவதைப் போலவே, பிறவீடுகளில் இருந்தும் நமக்குப் பல்வேறு வகையான இனிப்பு வகைகள், கனி வர்க்கங்கள் கிடைக்கும். அன்றே 27 வகையான சமையல் வகைகள் செய்யப்படும். கூட்டாஞ்சோறு ஆக்கப்படும். முழுக்கவும் முஸ்லிம்களாகவே நிரம்பியுள்ள ஒரு தெருவைக் கற்பனைசெய்து பார்த்து, அதோடு இந்த நேர்ச்சைப் பரிமாற்றம், மனஸ்தாபம் இருந்தாலும்கூட அந்தக் குடும்பத்தினரைத் தவிர்க்காமல் அவர்களுக்கும் நேர்ச்சையை வழங்கி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளும் அந்தப் பொற்காலங்களைக் கண்ணில் மிதக்கவிட்டுப் பாருங்கள் - சில நொடிகளேனும்! ‘இஸ்லாமிய விழிப்புணர்ச்சி’ என்னும் பெயரின் கீழே போயே போய்விட்டன அந்த இனிமைகள்! அதை மீட்டெடுக்கும் இன்னொரு மாற்றுவழி இந்தச் சமூகத்திற்கு இன்றுவரை அருளப்படவே இல்லை.
இதே நிலைதான், இன்று இறப்பு நிகழ்ந்த வீட்டிலும்! ‘மய்யத்’தைக் கொண்டுபோய் அடக்கம் செய்த கையோடு, அடக்கம் செய்யப்பட்ட மய்யத்துக்கும் தமக்கும் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முஸ்லிம் சமூகம் ஒதுங்கிவிட்டது. இதனால் இறந்தவரின் பெயரால் முன்பு ஓதப்பட்ட 40 நாள் பாத்திஹா இப்போது இல்லை; விருந்துகள் இல்லை. இவை தவ்ஹீத்வாதிகளின் வருகையால் உண்டானவை. அதேசமயத்தில் தவ்ஹீத்வாதிகளின் செல்வாக்கிற்கு உட்படாதவர்களும்கூட இறந்தவர்கள் பெயரில் பாத்திஹாக்கள் ஓதுவதைக் கைவிட்டுவருகிறார்கள். சில பகுதிகளில் மூன்றாம் நாள் அல்லது ஏழாம் நாளில் உறவினரை அழைத்து, வசதியுள்ளவர்களாயின் ஊரை அழைத்துப் பெரும் விருந்து அளிக்கிறார்கள். நாற்பது நாள் பாத்திஹா ஓதுவது சிலருக்குப் பொருளாதாரச் சுமையாக இருப்பதாலோ அசௌகரியமான ஏற்பாடாக இருப்பதாலோ பாத்திஹா ஓதுதல் விடுபடக்கூடியதாக இருக்கலாம்.
கந்தூரி வைபவங்கள் முஸ்லிம்களின் இன்னொரு தனி அம்சம். இதுவும் தர்ஹாவின் இன்னொரு கலாச்சாரப் படிநிலை. ஊருக்கு ஊர் அரேபியக் கலாச்சாரப் பாதிப்புக்கு ஆளான தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் அவர்கள் கந்தூரி வைபவத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதனால் அவர்களுடைய வீடுகளிலிருந்து கந்தூரி வரிவசூலிக்க முடிவதில்லை. கூடுமானவரை கந்தூரி வைபவத்தை முடக்கவே விரும்புகிறார்கள். இருப்பினும் அதை முழுதாய் நிறுத்திவிட முடிவதில்லை.
காயல்பட்டினம் மஹ்லரா கந்தூரி விசேசமானது. பல ஊர்களில் இருந்தும் மக்கள் குழுமுவார்கள். கந்தூரிச் சோறு பெரிய பெரிய சஹன்களில் வைக்கப்படும். ஒவ்வொரு சஹனிலும் நான்கு பேர் சாப்பிடும் அளவுக்குக் கந்தூரிச் சோறு இருக்கும். இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவத்தைக் கடைப்பிடிக்கும்வண்ணம் அதில் அனைவரும் ‘எச்சில்’ என்னும் உணர்வு தோன்றாதபடிக்குக் கூடி உண்ணுவார்கள். மற்ற ஊர்களில் அது ஓலைப்பெட்டிகளில் வழங்கப்படுகின்றது.
ஒரு பள்ளிவாசல் - ஒரு ஜமாத் என்ற நிலை மாறி, பல பள்ளிவாசல்கள் பல ஜமாத்கள் என்றாகி முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை பங்கப்பட்டிருப்பது கண்கூடான உண்மை! பெருநாள் ஒரு நாள் என்று இல்லை; ஒரே ஊரில் ஒரே தெருவில் பெருநாள்கள் பல நாள்களாக நீடித்தபடியே போகின்றன. கால மாற்றங்களாலும் பொருளாதாரத் தாக்கங்களாலும் அரசியல் சூழல்களாலும் பல்வேறு சமூகத்தினரின் பண்பாடும் மாறிவருவது இயல்பானதுதான். ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டு மாற்றங்களுக்கு மதமும் இந்த மண்ணில் சம்பந்தப்படாத வேறு சில காரணிகளும் துணையாய் இருக்கின்றன. இவை பிளவுபட்ட மனநிலையையும் வேடிக்கை மனோபாவங்களையும் தோற்றுவிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது முஸ்லிமோ அல்லது மாற்றுச் சமூகத்தவரோ அழலாம்; சிரிக்கலாம்; விரக்தியடையலாம்; மனம் சோர்ந்துபோகலாம்! கொண்டாடலாம்! எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் வழங்குகின்றன இந்தப் போக்குகள்!
பேரா. நத்தர்ஷா வீட்டுத் திருமணத்திற்குக் காரைக்கால் போய்விட்டு, என் வாழ்நாளில் முதன் முறையாக நாகூர் தர்ஹாவிற்கும் வேளாங்கண்ணி கோவிலுக்கும் சென்றுவந்தேன். அதற்கும் ஓராண்டுக்கு முன்பு என் சகலையின் அழைப்பின் பேரில் ஆத்தங்கரைப் பள்ளிவாசல் போயிருந்தேன்.
நாகூருக்கு நான் சென்றபோது காலை எட்டு மணி. ஆத்தங்கரைப் பள்ளிவாசலுக்கு நான் சென்றபோது மாலை ஐந்து மணி. காலையில் கூட்டம் குறைவான நிலை; மாலையில் கூட்டம் அதிகமான நிலை. இரண்டு தர்ஹாக்களிலும் முஸ்லிம்களுக்குச் சற்றேறக் குறைய நிலையில் மாற்றுச் சமூகத்தவர் கூடியிருந்தார்கள். குமரிமாவட்ட நாடார் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஆத்தங்கரைப் பள்ளிவாசலின் முன் பெரியோரும் சிறியோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய்க் கூடியிருந்தார்கள். நேர்ச்சைகளைப் பெறப் பயபக்தியுடன் முண்டியடித்தார்கள்! குழந்தைகட்கும் ஊட்டினார்கள். எண்ணிக்கை குறைந்தாலும் உணர்வுகள் குறையாத நிலை நீடிக்கும் என்றே தோன்றுகிறது. நாம் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் மாற்றங்கள் வரும்; வர வேண்டும்! அவை நம்மை வாழவைக்கவா தாழவைக்கவா என்பதுதான் நம் பெருங்கவலை.
 
 
Kalachuvadu April2011 article
 
 
எதிர்வினை
written by: Basheer Ahamed, Pudukkottai
தவ்ஹீத்வாதம்: இஸ்லாம் பண்பாட்டுக்கான எழுச்சி
பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறிவருவதை அல்லது கெட்டுப்போவதை எண்ணிச் சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்டுக் கட்டுரை வடிப்பது நல்ல விசயம். மார்ச் 2011, காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மது எழுதியுள்ள ‘தமிழர் பண்பாடு’ எனும் கட்டுரை முஸ்லிம்களின் பத்திரிகைகளில் வராமல் காலச்சுவடு எனும் பொது இலக்கியத் தளத்தில் வந்துள்ளதால் இந்தக் கட்டுரைக்கு எந்த முஸ்லிம் பத்திரிகையும் மறுப்பு எழுதமாட்டார்கள் என நம்புகிறேன். கதை, கவிதை இலக்கியம், சமூகம் இவற்றில் வலம்வரும் தமிழ் முஸ்லிம் பத்திரிகை உலகம் அல்லது தமிழ் முஸ்லிம் ஆலிம்கள், பெரும்பாலும் களந்தை பீர்முகம்மதுவின் கட்டுரையை உள் மனத்தில் நேசிப்பார்கள். அல்லது ‘நாம் எழுத நினைப்பதை’ வேறுபாணியில் அவர் எழுதிவிட்டார் என்று விட்டுவிடுவார்கள்.
காரணம் பீர்முகம்மது தன் கட்டுரையில் பெரும்பகுதியில் தவ்ஹீத்வாதிகளின் வளர்ச்சியை நினைத்து வேதனைப்பட்டு எழுதுகிறார். தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகளால் முஸ்லிம்களின் பண்பாடு பாழ்பட்டுப் போனது என்று பீர்முகம்மது பதிவுசெய்கிறார்.
அப்படி என்னதான் மாறிப்போய்விட்டது? அதையும் அவரே எழுதுகிறார்.
தமிழ் முஸ்லிம் பெண்கள், பள்ளி, கல்லூரி சென்று உயர்கல்வி படிக்கிறார்கள்; முஸ்லிம் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்; பல இன மக்களுடன் கலந்து பழகுகிறார்கள்; ஆடம்பரத் திருமணங்கள் குறைய ஆரம்பித்துள்ளன; இரவுத் திருமணங்கள் இல்லாமல் போய்விட்டன; வரதட்சணை இல்லாத் திருமணங்கள் கூடிவருகின்றன; தர்ஹாக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக ஆகிவருகின்றன; சந்தனக் கூடுகள் காணாமல் போய்விட்டன; ‘மய்யத்’ அடக்கம் செய்தபின் 40 நாள் பாத்திஹா போன்ற சடங்குகளிலிருந்து முஸ்லிம் சமூகம் விலகிவருகிறது; கந்தூரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கின்றன.
இது போன்ற கருத்துகள்தாம் பீர் முகம்மதுவின் கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஓரிடத்தில் இதெல்லாம் ‘அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்பு’ என்று சாடுகிறார். இன்னொரு இடத்தில் “இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி” என்றும் கூறுகிறார். பிறிதொரு இடத்தில் கொஞ்சம் ‘மென்டு முழுங்கி’ (அதாவது கஷ்டப்பட்டுக் கடைசியில் சொல்வது) தவ்ஹீத்வாதம் என்றும் ‘தவ்ஹீத்வாதிகளின் வருகை, செல்வாக்கு’ என்றும் பீர்முகம்மது தன் கட்டுரையில் பதிவுசெய்திருக்கிறார்.
பீர்முகம்மதுவின் எழுத்தைப் பற்றி விமர்சிப்பதற்கு முன்னதாகச் சில அடிப்படையான கருத்துகளைப் பார்ப்போம்.
முஸ்லிம்களின் பண்பாடுகளைப் பற்றிப் பேச, எழுத விரும்புபவர்கள் முதலில் தங்களின் பார்வையை உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் சரியானதாக அமையும். வட்டார வழக்கில் இருந்து பார்த்தால் பல சமயங்களில் பிழையான பார்வையாக அது ஆகிவிடக்கூடும்.
இஸ்லாம் மதம் அல்ல, வாழ்க்கை நெறி என்று பேசும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் அல்லது எழுத்தாளர்கள் தமது சொந்த வாழ்க்கையில் மதவாதிகளைப் போல நடந்துகொள்வார்கள். இப்படி இருக்கும்போது பாமர முஸ்லிம்களைப் பற்றி எப்படிச் சொல்வது?
இஸ்லாமியச் கலாச்சாரம் என்பது இன்ன இன்ன ஆடைதான் அணிய வேண்டும் என்று கூறியதே கிடையாது. எப்படி எப்படி அணிய வேண்டும் என்றுதான் அறிவுரை கூறுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தத் தமது நாடு, வெப்பநிலைக்கேற்றவாறு தமது விருப்பத்துக்குத் தக்கவாறு ஆடை அணியலாம். உடலில் எதை மறைக்க வேண்டும், என்னும் அடிப்படை ஒழுக்கவியல் அம்சத்தை ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவுறுத்துகிறது.
இந்த அடிப்படை விசயத்தைத் தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம்களில் சிலர் சொந்த ஊரில் வாழும்போது அறியாமல் இருந்து பிறகு வெளிநாடு சென்று திரும்பிய பிறகு பின்பற்றினால் பீர்முகம்மது இதை அரேபியப் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிறாரே! இது சரியா?
தமிழ் முஸ்லிம் பெண்கள் கல்லூரி சென்று படிக்கும்போதும் புர்கா அணிந்து செல்வதைக் குறிப்பிடுகிறார். கடந்த தலைமுறையைவிட இன்றைய தலைமுறையில் முஸ்லிம் ஆண்கள் தாடி வைத்திருப்பதைக் குறிப்பிடவில்லை. பீர்முகம்மதுவைக் கேட்கிறேன், நாங்கள் இஸ்லாத்தை விரும்பி, புரிந்து, பின்பற்ற விரும்புவது ஒன்றும் ‘கள்ளக் காதல்’ அல்ல, இப்படி முஸ்லிமாக வாழும் அதேசமயம் பல இனச் சமுதாயத்தோடு வரம்புக்குட்பட்டு, இணக்கமாக, மனிதநேயத்தோடு வாழ்கிறோமே! எங்களின் நேர்மையான பரந்து விரிந்த ஈமானியக் கண்ணோட்டம் எல்லாம் பீர்முகம்மது போன்றவர்களுக்குத் தெரியாது.
தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. அது சுகாதாரமற்ற குடியிருப்புகளாக இருக்கலாம். ஒழுங்கமைப்பு இல்லாத கூட்டுக் குடும்பங்களாக இருக்கலாம். வெளிநாட்டு வாழ்க்கையால் தொலைந்துபோன குடும்ப வாழ்க்கையாக இருக்கலாம். இலைமறைவு காய்மறைவாய் இருந்த ‘டாஸ்மாக்’ கலாச்சாரம் முஸ்லிம் இளைஞர்களிடம் பெருகிவருவதாக இருக்கலாம்.
. . . இப்படித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் அறிவு மேம்பாட்டுக்குப் பணியாற்ற நினைப்பவர்கள் எழுதப் பேச, போராட நிறையக் களங்கள் இருக்கின்றன. பீர்முகம்மது இதையெல்லாம் விட்டுவிட்டு, தர்ஹா போச்சு, சந்தனக் கூடு போச்சு, 40 நாள் பாத்திஹா போச்சு என்று கவலைப்படுவதன் மூலமும் வரதட்சணை இல்லாத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன என்றும் இவையெல்லாம் தவ்ஹீத்வாதிகளின் வருகை என்றும் பதிவுசெய்கிறார்.
“இவையெல்லாம் ஒரு நல்ல பண்பாட்டுக்கான எழுச்சி” என்பதைப் பீர்முகம்மது போன்றவர்கள் மட்டுமல்ல தமிழ் முஸ்லிம்கள் பலரும் உணராமல் உள்ளனர். காரணம் தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் எனத் தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர்கள் செய்யும் தவறுகளால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி’ தவறாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தவ்ஹீத்வாதிகள் என்பவர்கள் அதிர்ஷ்டவசமாகப் பல உயரிய நல்ல விசயங்களை மக்களிடையே பரப்பினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உள்ள அவர்களின் தனிப்பட்ட குறைபாடுகளால் அவர்கள் பரப்பிய நல்ல விசயங்கள் விமர்சனத்துக்கு ஆளாகிவிட்டன.
பீர்முகம்மது போன்றவர்களுக்கும் அவரது எழுத்தை நேசிக்கும் வாசிக்கும் அன்பர்களுக்கும் ஏன் தமிழ்நாட்டு தவ்ஹீத்வாதிகளுக்கும் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதாவது நபி முகம்மது அவர்களின் வாழ்வியலை மார்க்கமாக ஏற்றுக்கொண்டுள்ள நாம் நம்மை ‘முஸ்லிம்’ என்னும் பொது வார்த்தையில்தான் விளித்துக்கொள்ள வேண்டுமே தவிர தவ்ஹீத்வாதி என்றோ அல்லது வேறு எந்தப் பெயரைக் கூறியும் அடையாளப்படுத்துவது நபி முகமது அவர்களின் போதனைக்கே முரணானது.
தர்ஹா கலாச்சாரம் என்பது இஸ்லாத்தின் போதனைகளுக்கு எதிரானது என்றும் சந்தனக்கூடு போன்ற வைபவங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதும் இந்த ‘தவ்ஹீது’ காரர்கள் கூறுமுன் கடந்த நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ள வேலூர் பாக்கியத்துஸாலிஹா மதரஸாவில் ‘பத்வா’ வெளியிட்டிருக்கிறார்கள்.
இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாட்டுச் சீர்திருத்தம் கடந்த 30 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது.
இதே போன்று அகில இந்திய அளவில் மௌலானா மௌதூதி, ஜகரியா மவுலானா போன்றவர்களாலும் கடந்த 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது.
அரபு தேசங்களில் இந்தப் பண்பாட்டுச் சீர்திருத்தங்கள், இமாம்ஹசன் அல் பன்னா, அப்துல்வஹாப் போன்றவர்களாலும் கடந்த நூற்றாண்டுகளிலேயே ஆரம்பிக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது.
மூடப்பழக்கவழக்கங்களான, கயிறு மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல், ஜோசியம் பார்த்தல் போன்ற செயல்கள் தமிழ் முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த மூடப் பழக்கவழக்கங்களைப் பண்பாடு என்றோ கலாச்சாரம் என்றோ பூசி மெழுகிச் சொல்லாமல் நேரடியாக, தெளிவாகத் தமிழ் முஸ்லிம் நெஞ்சங்களைத் தட்டி எழுப்பி அவையெல்லாம் ‘ஓர் இறைவனை’ நம்பாத ஈனச் செயல்கள் என்று சொன்னவர்கள்தாம் பீர்முகம்மது குறிப்பிடும் ‘தவ்ஹீத்வாதிகள்’. இந்தச் சீர்திருத்தப் பண்பாட்டு எழுச்சியைக் குறை காண்பது பிழையாகும்.
இஸ்லாமியப் பண்பாடு என்பது உலகளாவிய ஓர் இறைக்கொள்கை ஆகும். அதாவது ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது மொழியால், இனத்தால், நிறத்தால் மாறுபட்டாலும் மனித இனம் முழுமையும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டுள்ளது என்று நம்பச் சொல்கிறது இஸ்லாம். இப்படி நம்பும்போதுதான், நமக்குள் வேற்றுமைகள் இருந்தாலும்கூட அதையும் மீறி சகோதரத்துவம் மலரும். ஆகவே ஓர் இறை எனும் தத்துவத்தைப் பின்பற்றி நிலைநாட்டுவதுதான் மனித இனத்தினுடைய ஒற்றுமைக்கான முதல் படி. இந்த ஓர் இறை - தத்துவத்திற்கு முரணானதுதான் சிலைகள் வழிபாடும் தனிமனித வழிபாடுகளும் இயக்க வழிபாடுகளும் தர்ஹா வழிபாடுகளும்.
அந்த தர்ஹா வழிபாட்டைத் தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலிருந்து நீக்கி அறிவுப் பண்பாட்டு எழுச்சியை உரக்கக் கூறியவர்கள்தாம் இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’.
தாய் அல்லது தந்தை மரணித்தவுடன் மூன்றாம் நாள் ஏழாம் நாள் நாற்பதாம் நாள் பாத்திஹா ஓதி ஊர் மெச்சும் பழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார் பீர்முகம்மது. தாய் தந்தை உயிரோடு இருக்கும்போது அவர்களைக் கவனித்துப் பணிவிடை செய்து நல்ல பண்பாடான முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்பது தவ்ஹீத்வாதிகளின் பிரச்சாரம் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம் அறிஞர்களுமே வலியுறுத்தி வரும் கருத்துதான்.
இதைப்போலவே தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், ஏன் வரதட்சணை இல்லாத் திரு மணங்களாக இருக்கட்டும், மூடபழக்க வழக்கங்கள் ஒழிப்பாக இருக்கட்டும், தொப்பி, தாடி விசயமாகக்கூட இருக்கட்டும்.
இந்த ‘தவ்ஹீத்’வாதிகளைத் தவிர மற்ற எல்லா அமைப்புகளிலுள்ள ஆலிம்கள், எழுத்தாளர்கள் எல்லாம் பாஸிட்டிவாக, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று கூறி நிறுத்திக்கொள்வார்கள்.
இந்த தவ்ஹீத்வாதிகள் மட்டும், ‘இவை இவை’ செய்ய மார்க்கத்தில் அனுமதி உண்டு ‘இவை இவை’ செய்யக் கூடாது என்று கொஞ்சம் கறாராகச் சொல்லிவிடுவார்கள். அதாவது வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாகச் சொல்வது தவ்ஹீத்வாதிகளின் பாணி. பூசி மெழுகிப் பிரச்சாரம் செய்வது மற்ற ஆலிம்களின் பாணி.
அதேசமயம் தனியாகப் பள்ளிவாசல் கட்டிச் சமுதாயத்தைக் கூறு போடுவது. இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’ செய்துவரும் ஹிமாலயத் தவறாகும். இந்தத் தனிப் பள்ளிவாசல் கொள்கைகளால் உன்னதமான ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி’க்குத் தடையாக உள்ளார்கள் இந்த தவ்ஹீத்வாதிகள். தனித்தனி இயக்கங்களாக அமைத்துக்கொண்டு, வட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் நியமித்துக்கொண்டு தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகள் போல் செயல்படுவதும் இந்த தவ்ஹீத்வாதிகள் செய்துவரும் தொடர் தவறுகள். தவ்ஹீத்வாதிகளின் குறைகள், நிறைகள் என நிறைய எழுதலாம். அது இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாத விசயங்கள்.
எது எப்படியோ, மற்ற ஆலிம் உலமாக்கள், பீர்முகம்மது போன்றோர் தடுத்தாலும் தடுக்காவிட்டாலும் இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ‘தவ்ஹீத்வாதிகள்’ கொஞ்சம் சுயபரி சோதனை செய்து தம்மைத் தாமே திருத்திக்கொண்டால் ‘இஸ்லாமியப் பண்பாட்டு எழுச்சி” நன்றாக இருக்கும் என்பதுதான் நம் பெருங்கவலை.
இந்தக் கட்டுரையின் உள்ளார்ந்த கருத்துகளையும் உண்மையான நோக்கத்தையும் பீர்முகம்மது போன்றவர்களும் அவரது கட்டுரையை உள் மனத்தில் நேசிக்கும் முஸ்லிம்களும் நிறையப் படிக்க வேண்டும்! யோசிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
http://www.kalachuvadu.com/
 
நன்றி---நண்பர் பஷீரின் மறுப்பினை அப்படியே வெளியிட்ட கால சுவடு இதழுக்கு........
 
 
 
 
 
 

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

2 நல்ல கருத்துரைவழங்கியோர்::

Anonymous said...

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சியின் கலாச்சார, பண்பாட்டுச் சீர்திருத்தத்தைச் சார்பற்ற முறையில் தெளிவுபடுத்தியுள்ளார் அ. ப. அகமது. வெளியில் பளபளப்பாகத் தெரிந்தாலும் சமூகப் பொருளாதார நிலையில் கல்வித்தளங்களிலும் முஸ்லிம்கள் மிகத் தாழ்ந்தநிலையிலே உள்ளார்கள். இதைச் சமீபத்தில் சச்சார் கமிட்டியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் மக்களின் மூடப்பழக்கங்களைக் கைவிடக்கோரி போராடி அதில் ஓரளவு வெற்றி பெறுவதற்கும் தவ்ஹீத் இயக்கங்கள் தாம் காரணம். சமூகத்தில் மதங் கடந்து புரையோடியிருக்கும் வரதட்சணைக் கொடுமை நீங்கி இளைஞர்கள் திருமணக்கொடை (மஹர்) கணிசமாகப் பெண்களுக்குக் கொடுத்து மனம்புரியும் நிலை வந்துள்ளது. சமூக அந்தஸ்து என்னும் அளவுகோல் மறக்கப்பட்டு நற்குணம், கல்வி, அழகு ஆகிய கூறுகள் திருமணச் சந்தையில் முன்னுரிமை பெற்றுள்ளது நல்ல அறிகுறி. பெண்களிடையே கல்வி விழுக்காடு பெருகியுள்ளது. பல பிரச்சினைகளுக்கு மத்தியில் சமுதாயம் அதலபாதாளத்திற்குச் செல்லாமல் மீட்டது தவ்ஹீத் இயக்கங்கள்தாம்.

திருக்குர்ஆனும் நபிகள் நாயகத்தின் ஹதீஸும் புத்தகங்களாகப் பல வீடுகளில் பரண்களில் இருந்ததைத் தூசிதட்டி, இதுவல்ல இஸ்லாம், உண்மை இஸ்லாம் இதுதான் என லட்சக்கணக்கான படித்த அறிஞர்களையும் இளைஞர்களையும் அவற்றைப் படிக்கத் தூண்டி நல்லொழுக்கமுள்ளவர்களாக்கியது தவ்ஹீத் இயக்கங்களே. இதுதான் இஸ்லாம் என்ற தவறான புரிதல் இருந்தபோது புரிதலற்ற மதவெறி இருந்தது; புரிந்தபோது இந்த எண்ணங்கள் மாறி மதப்பற்றே வந்துள்ளது. தமிழகம் போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு இது சிறந்த வழிகோலாக அமையும்.

மிகப் பெரிய சமூகப் பண்பாட்டுச் சீர்திருத்த புரட்சி செய்த ‘தவ்ஹீத்வாதிகள்’ தற்போது கருத்து மோதலால் மாறி மாறி ஒருவர்மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பதும் பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவதும் தனித்துவப்படுத்தித் தங்களைக் காட்ட முயல்வதும் இஸ்லாமியத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் தடைக்கற்களாக மாறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. சொல்வதை மென்மையாக - ஆனால் அழுத்தமாகச் சொல்லி, தனிமனிதர்களைக் குறைகூறுவதைத் தலைவர்கள் நிறுத்தினால், இந்த எழுச்சி நாட்டிற்கும் இஸ்லாமியச் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். “நீயா நானா?” என்ற மிருக குணம் மாறி “கலந்து சிந்திப்போம்” என்ற இஸ்லாமிய வழிமுறை வந்தால் முடங்கிப்போன எழுச்சி இன்னும் வேகமாகும்.

கே. நிலாமுதீன், திருச்சி
This lette also published in kalachuvadu magazine.

Anonymous said...

காலச்சுவட்டில் முஸ்லிம்மின் கட்டுரையா நல்லா பாருங்கப்ப எதவது எழுதியிருக்கப் போவுது பின்னடி முன்னாடி இருக்கிற கட்டுரையின் கொஞ்சம் விசம்.

அரபு ஷேக்குகளின் மொழிகளைக் கற்கிறார்கள்; பிரமாண்டமான மசூதிகள் அவர்களின் உள்ளங்களையும் உடல்களையும் ஒருசேர ஆக்ரமிக்கின்றன. அரேபியப் பழங்குடி இனத்தின் கலாச்சாரத்தையே இஸ்லாமியக் கலாச்சாரமாகக் கருதி, சொந்த ஊருக்கு ஓடோடி வந்து தம் பெண்டு, பிள்ளை, அன்னையரையெல்லாம் கருப்புத் துப்பட்டாவால் உடல் முழுக்க மூடி மறைத்துவிட்டுப் பின்னரும் அரேபியா ஓடிச் செல்கிறார்கள். இன்னொரு குழு அதே வேகத்தில் அங்கிருந்து இங்கு ஓடிவருகிறது. “தொழுகைக்கு ஏது தொப்பி?” என்று வீசியெறிந்து விட்டுப் போகிறது;